தாந்தேயின் தேசியக் கவிதை

பாரதியின் நினைவு நூற்றாண்டை அனுசரித்த சில நாள்களிலேயே உலக மகாகவிகளில் மற்றொருவரானஇத்தாலியக் கவிஞர் தாந்தேயின் எழுநூறாம் நினைவு நூற்றாண்டு நாளை (14 செப்டம்பர்) அனுசரிக்கப்பட உள்ளது.

1265ல் ப்ளோரன்ஸ் நகரத்தில் பிறந்த தாந்தே அல்கியரி (Dante Alghieri) 14 செப்டம்பர் 1321ல்போப்பாண்டவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட ராவென்னா நகரத்தில் இறந்தார்.  தாந்தேக்கும்பாரதிக்கும் இடையிலான ஒற்றுமைகள் வியக்க வைப்பவை.

இருவரும் மூட நம்பிக்கைகளும் அரசியல், சமூகப் பிளவுகளும் அடக்குமுறையும் மலிந்திருந்த பழையகாலத்துக்கும் இவற்றையெல்லாம் களைந்து விட்ட நவீன முற்போக்குச் சிந்தனைகளும் சுதந்திரஜனநாயகப் போக்கும் நிறைந்ததாக இருக்கும் என்று அவர்கள் நம்பிய புதிய யுகத்துக்கும் இடையில்வாழ்ந்தவர்கள். 

தாந்தேயின் காலத்தில் இத்தாலியும் ஐரோப்பாவுமேகூட கத்தோலிக்கத் திருச்சபையின் இரும்புப்பிடியில்இருந்தன. திருச்சபை தனது அதிகாரத்திற்கும் செல்வச் செழிப்புக்கும் இடையூறாய் இருக்கக் கூடியஎந்தவிதமான அரசியல், சமூக, ஆன்மீக முன்னெடுப்புக்களையும் மிகக் கொடூரமான வழிகளில் அடக்கிவந்தது. கல்வியறிவு வளர்ந்ததால்தானே எதிர்ப்பு வளரும் என்ற எண்ணத்தில் கல்வி, இலக்கியம் என்றஅனைத்தும் திருச்சபையின் வழக்கு மொழியான லத்தீன் மொழியியேலே அனுமதிக்கப்பட்டுத் தேசியமொழிகள் ஒடுக்கப்பட்டன. 

லத்தீனில் பேசுவதுதான் அறிவின் அடையாளம். லத்தீனில் பேசுகிறவன்தான் நாகரிகமானவன். கடவுளுக்குப் பிடித்தமான மொழி லத்தீன்தான் என்று திருச்சபை பிரச்சாரம் செய்த நேரத்தில் தாந்தேதனது மிக முக்கியமான நீண்ட கவிதையான 14,233 வரிகளைக் கொண்ட The Divine Comedy-ஐஇத்தாலியின் அன்று வழங்கிவந்த துஸ்கன் மொழியில் உள்ள எளிய, இனிய வார்த்தைகளைப்பயன்படுதிப் பாடினார். இதுவே இவருக்கு அடுத்து வந்த இத்தாலிய கவிஞர்களான பெட்ரார்க், பொக்காசியோ போன்றவர்கள் தங்கள் படைப்புக்களை இத்தாலிய மொழியிலேயே பாடுவதற்கும், பின்னாளில் நவீன இத்தாலிய மொழி என்று ஒன்று உருவாவதற்கும் அடித்தளம் அமைத்துத் தந்தது.

இதன் காரணமாகவே தாந்தே இத்தாலிய மொழியின் தந்தை என்றும், உச்சக் கவிஞர் (il Sommo Poeta) என்றும் இத்தாலிய மக்களால் அழைக்கப்படுகிறார்.  ரோமானிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகுபல்லாண்டுகளாய்க் குட்டிக் குட்டி ராஜ்ஜியங்களாகப் பிரிந்து கிடந்த இத்தாலிய தேசம் பத்தொன்பதாம்நூற்றாண்டில் ஒரே தேசமாய் உருவானதற்கு இத்தாலிய மக்கள் அனைவரையும் இணைக்கும் ஒரே மொழிஉருவானது முக்கிய காரணம்.

தாந்தே எழுதிய The Divine Comedy இன்றும் இத்தாலிய மொழியின் மிக முக்கியமான கவிதைஆக்கமாகப் பார்க்கப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ இறையியலின்படி மனிதர்களின் ஆத்மாமோட்சத்தை அடைய கடக்க வேண்டிய மூன்று நிலைகளான நரகம் (Inferno), ஆத்மாக்கள்தூய்மையாக்கப்படும் இடைநிலை (Purgatario), சொர்க்கம் (Paradiso) என்ற நிலைகளைத் தாந்தேயின்ஆத்மாவே கடப்பதுபோல் ஒரு கற்பனை கதையைச் சித்தரிக்கிறது. இந்நூலில் நரகத்தைப் பற்றியும்சொர்க்கத்தைப் பற்றியும் தீட்டிய வருணனைகளே பின்னாளில் லியோனார்டோ டா விஞ்சி, மைக்கலேஞ்சலோ, டோனடெல்லோ, போட்டிசெல்லி போன்றோர் வரைந்த ஓவியங்களுக்குமாதிரிகளாகப் பயன்பட்டன.  பொதுமக்களிடையே கிறிஸ்துவ நரகம் என்றால் இப்படித்தான் இருக்கும்சொர்க்கம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பத்தையும் உருவாக்கியதில் தாந்தே The Divine Comedy-இன் பங்களிப்பு முக்கியமானது. 

அதே நேரத்தில், தாந்தே The Divine Comedy-ஐ வெறும் வேதாந்த விசார நூலாக பாடவில்லைஎன்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. தாந்தே அக்கால இத்தாலிய அரசியலில் மிகுந்த ஈடுபாடுகொண்டவராக இருந்தார். நரகம், இடைநிலை, சொர்க்கம் என்று பயணப்படும் தாந்தேயின் ஆத்மாநரகத்தில் தனது எதிரிகள் தனக்குப் பிடிக்காதவர்கள் என்பவர்கள் அனைவரும் சாத்தானின்அடியாள்களால் உதை வாங்குவதையும் தீயில் போட்டு வாட்டப்படுவதையும் மறக்காமல் பாடுகிறார்! இடையிடையே திருச்சபை தலைவர்களைப் பற்றிய விமர்சனமும், முற்போக்குச் சிந்தனைகளையும்தனிமனிதச் சுதந்திரத்தைப் போற்றும் கருத்துக்களையும் தாந்தே தனது கவிதையில் சந்திக்கும்கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

The Divine Comedy-ஐத் தவிர தாந்தே  காதல் கவிதைகள், கலை, இலக்கிய விமர்சனங்கள், மெய்யியல்குறித்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவற்றில் முக்கியமானது தேசிய மொழியில் இலக்கியம்படைக்கப்படுவதைப் பரிந்துரைத்து அவர் எழுதிய De vulgari eloquentia என்ற கட்டுரை.

கவிதையில் இரண்டு புது முயற்சிகளையும் தாந்தே முன்னெடுத்திருக்கிறார். Dolce stil novo (‘இனிய புதியபாணி’) என்று ஒரு புதிய கவிதை பாணியைத் தாந்தே பிரபலப்படுத்தி அதற்குப் பெயரும் அவரேகொடுத்தார். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் தூய காதலைப் பாடிய dolce stil novo கவிதைகள் காதலிக்கப்படும் பெண்ணைத் தூய்மையும் தெய்வத்தன்மை நிறைந்தவளாகவும் கவிஞனுக்குஉணர்வெழுச்சிகளையும் உன்னதப் படைப்புகளையும் சாத்தியமாக்கித் தரும் தெய்வ உருவமாகவும்சித்தரித்தன. அந்த பெண்ணின் அழகிய உருவத்தை இனிமையும் எளிமையும் நிறைந்தவையும் ஒளிமிகுந்த்ஹவையுமான வார்த்தைகளால் விவரிக்க முயன்றன. 

மேலும் தாந்தே இத்தாலிய மொழிக்கு terza rima என்ற புதிய யாப்பு முறையையும் உருவாக்கித் தந்தார். இத்தாலிய தேசத்தின் இசைப்பாடல் மரபிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த யாப்பு முறையில்தான் The Divine Comedy எழுதப்பட்டிருக்கிறது.

தாந்தேயின் இலக்கிய முன்னெடுப்புக்கள் பின்னாளில் வந்த இத்தாலிய படைப்பாளிகளை மீதுமட்டுமின்றி ஆங்கில இலக்கியத்தில் எழுந்த முக்கிய படைப்பாளிகளான சாசர், மில்டன், ஷெல்லி, டென்னிஸன் ஆகியோர் மீதும் மற்ற பல ஐரோப்பிய எழுத்தாளர்கள் மீதும் பெரும் தாக்கத்தைஏற்படுத்தியுள்ளன. 

அந்த வகையில் தாந்தே உலகக் கவிஞர்களின் வரிசையில் முதல் நிலையில் வைத்துப் பார்க்கக்கூடியவராகவே இருக்கிறார்.

எழுத்தில் அர்ப்பணிப்பு – பெனிலொப்பி ஃபிட்ஸ்ஜெராட்

Penelope Fitzgerald என்ற ஒரு பிரிட்டிஷ் பெண் நாவலாசிரியர். 1979ல் ‘Offshore’ என்ற நாவலுக்காக Booker பரிசை வென்றவர். 2008ல் The Times நாளிதழ் 1945 முதல் எழுதும் மிகச் சிறந்த ஐம்பது பிரிட்டிஷ் நாவலாசிரியர்களில் ஃபிட்ஸ்ஜெராட்-டையும் குறிப்பிட்டது.

இதில் குறிப்பிடத்தக்கச் செய்தி என்னவென்றால் 1916ல் பிறந்த ஃபிட்ஸ்ஜெராட் தன் முதல் நாவலான ‘The Golden Child’-ஐ வெளியிட்டது 1977-ல் அவர் அறுபதாவது வயதில். தன் இலக்கியப் பணியைத் தொடங்கியது அதற்கு இரண்டு வருடத்திற்கு முன்னால்தான். 1975லும் 1977லும் இரண்டு வாழ்க்கை வரலாறுகளை ஃபிட்ஸ்ஜெராட் எழுதி வெளியிட்டார்.

அதற்கு முன்னால் குடிபோதைக்கு அடிமையானவரும், செக் மோசடி செய்ததால் வழக்கறிஞர் தொழிலிலிருந்து நீக்கப்பட்ட பழைய மிலிட்டரிக்காரரான தனது கணவரைப் பார்த்துக் கொள்வதிலும், தன் குடும்பத்தை வறுமையில் மூழ்கிப் போகாமல் பார்த்துக் கொள்வதிலும் அவர் காலம் கழிந்தது. புத்தகக் கடையில் வேலை செய்தும், ஆசிரியராகப் பணி புரிந்தும் ஃபிட்ஸ்ஜெராட் பணத்தை திரட்டினார். குடும்பத்தோடு அவர் வாழ்ந்து வந்த வீட்டுப்படகு அவருடைய கடிதங்களோடும் ஆவணங்களோடும் இரண்டு முறை தண்ணீரில் மூழ்கியது. ‘Offshore’ என்ற நாவல் இந்த வீட்டுப் படகுவாசிகளின் வாழ்க்கையைச் சொல்லகிறது.

ஃபிட்ஸ்ஜெராட் தனது 69 வயது தொடங்கி எழுதிய நான்கு வரலாற்று நாவல்கள்தான் இலக்கியத்தில் அவருடைய இடத்தை நிலைநாட்டின. நான்கும் நான்கு விதம்.  1950களில் கம்யூனிஸ்ட் இத்தாலியில் நடப்பதாக ஒரு கதை (Innocence, 1986).  கம்யூனிஸத்துக்கு முந்திய மாஸ்கோவில் நடப்பதாக மற்றொன்று (The Beginning of Spring, 1988). 1912ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட இயற்பியல் புரட்சிகளின் தோற்றுவாய்க் காலத்தில் நடப்பதாக மூன்றாவது (The Gate of Angels, 1990). பதினெட்டாவது நூற்றாண்டு ஜெர்மனியில் ஏற்பட்ட மெய்யியல் விவாதங்களை விவரிக்கும் Blue Flower என்ற 1995 வருடத்து நாவல் நான்காவது.

இந்த நான்கு நாவல்களிலும் அந்தந்தக் காலக்கட்டங்களின் வாழ்க்கை முறையின் மிக நுணுக்கமான செய்திகளை ஃபிட்ஸ்ஜெராட் தன் நாவல்களில் புகுத்தியிருப்பார். உதாரணத்திற்கு, புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில் நிலவிய கையூட்டுப் பழக்க வழக்கங்கள். 1950களில் இத்தாலிய கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தப் போக்கு மற்றும் அமைப்பு முறை.  1910களில் தலையெடுத்த இயற்பியல் கண்டுபிடிப்புக்களின் விவரங்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் ஜெர்மானிய மெய்யியல் மற்றும் அங்கு நடத்தப்பட்ட உப்பளத் தொழிலின் விவரங்கள்.

A.S. Byatt ஒருமுறை இந்தக் கேள்வியை ஃபிட்ஸ்ஜெராட்டிடம் கேட்டபோது அவர் ஜெர்மானிய உப்புத் தொழிலைப் பற்றிய குறிப்புக்களை முழுவதும் ஜெர்மன் மொழியில் படித்ததாகப் பதில் சொன்னார் என்று Julian Barnes என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சொல்கிறார்.

அந்த வயதில் அந்த அர்ப்பணிப்புப் பெரிது.

ஃபிட்ஸ்ஜெராட்டிடம் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் அவரது சரளமாம ஆங்கில எழுத்து நடையும் அவர் எழுத்திலிருக்கும் சொற்சிக்கமும். எதை விவரித்தாலும் வார்த்தைகளை அதிகம் செலவழிக்காமல் இருப்பது ஃபிட்ஸ்ஜெராட்டின் குணமாம்.

வழவழா என்று விவரிப்பது வாசகனின் அறிவைக் கேலி செய்வதற்கு ஒப்பாகும் என்பது ஃபிட்ஸ்ஜெராட்டின் கருத்து.