மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்ட தொடக்கம், நடுப்பகுதி, முடிவு என்ற வடிவ நேர்த்தியைத் தாண்டியும் மற்ற கதைகளை ஒப்பு நோக்கத் துப்பறியும் கதைகளுக்கு வேறொரு சிறப்பும் உள்ளது.
மற்ற புனைவு கதைகளைவிட துப்பறியும் கதைகள் மிக பலமான தத்துவார்த்த அடிப்படையைக் கொண்டவை.
ஒவ்வொரு குற்றமும் உலகியல் மற்றும் சமூகவியல் ஒழுங்குகளைக் குலைத்து அற மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
குற்றத்தின் காரணத்தையும் குற்றவாளியையும் கண்டுபிடிக்க உதவும் துப்பறிவாளன் இவற்றைச் செய்வதன் மூலம் மீண்டும் உலகத்திலும் அவர் சார்ந்திருக்கும் புனைவு சமுதாயத்திலும் தொலைந்து போன அறத்தையும் ஒழுங்கையும் மீட்டெடுக்க உதவுகிறான்.
மற்ற புனைவு படைப்புக்களில் இந்த அற உணர்வு தெளிவாய்ச் சொல்லப்படாமல் இருக்கலாம் அல்லது சற்றே குழப்பமாய்ச் சொல்லப்பட்டிருக்கலாம்.
ஆனால் குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்றும் அதைத் துப்பு துலக்கிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க யாரோ சில பேர் கிளம்பியிருக்கிறார்கள் என்று தொடங்கும் மிகச் சாதாரணமான துப்பறியும் கதைகூட இந்தத் தத்துவார்த்தப் பார்வையை எடுத்து வைக்கும் விஷயத்தில் மிக இயல்பாகவே பலமுள்ளதாக இருக்கிறது.
கதை புனைவதில் காட்ட வேண்டிய அக்கறையில் மட்டுமில்லாமல் எல்லா மனிதர்களுக்கும் மிகப் பெரிய அகவியல் சவால்களாக அமைந்திருக்கும் (1) அறம் சார்ந்த கேள்விகளையும், (2) சமூக ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு சார்ந்த கேள்விகளையும், (3) சமுதாயத்தில் நீதி பரிபாலனத்துக்கு என்று அமைக்கப்பட்டிருக்கும் நிர்வாக அமைப்புக்களின் அதிகாரங்களைக் குறித்த கேள்விகளையும், (4) தனிமனிதர்களின் உயிர் மற்றும் உடைமை மதிப்பு எவ்வகையது என்ற கேள்விகளையும்; (5) மனிதர்களைக் குற்றங்கள் செய்யத் தூண்டும் காரணிகளையும் துப்பறியும் கதைகள் வாசகனின் முன்னால் எடுத்து வைக்கின்றன.
துப்பறியும் கதைகளில் இயல்பாகவே இப்படிப்பட்ட தத்துவ விசாரணையின் ஆழமும் கதை அமைப்பின் துல்லியமும் சாத்தியப்படுவதாலேயே போர்ஹெஸ், போலான்யோ போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர்கள் அவற்றை புனைவெழுத்தின் உச்சமாகக் கருதினார்கள்.
உம்பெர்ட்டோ எஃகோ மேற்கூறிய ஐந்து கேள்விகளை அடிப்படையாகக் கொண்டே தன்னுடைய கிளாஸிக் துப்பறியும் நாவலான The Name of the Rose-ஐ 14ம் நூற்றாண்டு ஐரோப்பிய தத்துவச் சிந்தனைகளை அலசும் முழுநீள மெய்யியல் விசாரணையாகவே எழுதினார்.
தத்துவார்த்த விசாரணையின் ஆழம், அறத்தின் வெற்றி, அறத்தின் வெற்றியின் மூலம் சாமானிய மனிதர்களாலான சமுதாய அமைப்பின் வெற்றி மற்றும் மிகக் கவனமாக, துல்லியமான விவரங்களால் நெய்யப்பட்ட கதை – இந்த அம்சங்களைக் கொண்ட துப்பறியும் கதைகள் வாசகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி, கிளாஸிக்குகளாகவும் கருதப்படுகின்றன.
(தொடரும்)

சிறப்பு… அடுத்தடுத்த பாகங்களுக்கு ஆவல் எழுகிறது…
மேற்சொன்ன ஐந்து கேள்விகளையும் மற்ற கதைகளுக்கும் கேட்டுப்பார்க்க தோன்றுகிறது…
LikeLike