கடந்த சில நாள்களாகக் குறுங்கதைகளை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
(ஞாயிற்றுக்கிழமைதான் தாமஸ் பிங்கோன்-இன் Gravity’s Rainbowஐ மறுபடியும் வாசித்து முடித்தேன். கொஞ்ச நாளைக்கு மனம் சுருக்கமான கதை வடிவங்களை நாடுகிறது என்பதும் உண்மை.)
இந்த வீடடங்கு காலம் பல குறுங்கதைகளைத் தமிழ் வாசகர்களுக்குத் தந்திருக்கிறது என்பது உண்மைதான். பல கருப்பொருள்களைப் பற்றிய தனித்தனி குறுங்கதைகள், ஒரே கருப்பொருளை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டிலிருந்து மூன்று குறுங்கதைகள் என்று எழுத்தாளர்கள் எழுதிக் குவித்திருக்கிறார்கள்.
குறுங்கதை வடிவத்தை எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
குறுங்கதைக்கும் அதைவிட வடிவத்தில் நீளமான கதைகளையும் ஓப்பிட ஓவியத் துறையிலிருந்து உதாரணங்களைக் கடன் வாங்கிக் கொள்வது உதவியாய் இருக்கும் என்று தோன்றுகிறது.
பெரும்பாலான ஓவியர்கள் முழுமையான வண்ண ஓவியங்களைத் தீட்டும் முன்னால் பென்சிலைக் கொண்டோ கரித் துண்டுகளைக் கொண்டோ வரையப் போகும் ஓவியத்தின் கோட்டுச் சித்திரங்களை வரைந்து பார்ப்பார்கள்.
தீட்டப்போகும் ஓவியத்தில் சேர்க்கப்போகும் உருவங்கள், பொருள்கள் ஆகியவற்றின் அளவுகள், எந்தத் திசையிலிருந்து எந்த அளவுக்கு வெளிச்சம் ஓவியத்திலுள்ள உருவங்கள்மீது விழ வேண்டும் என்பதை எல்லாம் கோட்டுச் சித்திரம் அனுமானிக்க உதவும்.
இப்படி வரையப்படும் கோட்டுச் சித்திரங்கள் தேவையில்லாத விவரங்களைக் தவிர்த்து (1) ஓவியத்தின் கருப்பொருளை எடுத்துக் காட்டப் போகும் முக்கிய உருவங்களையும்; (2) அவற்றின் மிக முக்கியமான சிறப்பியல்புகளையும்; (3) உருவங்கள் ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பினையும் காட்டும் விதத்தில் இருக்கும்.
இந்தக் காரணங்களுக்காகவே கோட்டுச் சித்திரங்களில் வண்ணங்கள் சேர்ப்பது வழக்கமில்லை.
கோட்டுச் சித்திரங்கள் பெரும்பாலும் தீட்டப்போகும் ஓவியத்துக்கான பயிற்சி என்றாலும்கூட பல ஓவிய மாஸ்டர்களின் கோட்டுச் சித்திரங்கள் பல லட்சங்களுக்கு விலை போயிருக்கின்றன.
கோட்டுச் சித்திரங்களுக்கு இருக்க வேண்டிய இயல்புகள்தான் குறுங்கதைகளுக்கும் என்று தோன்றுகிறது: அத்தியாவசியமில்லாத விவரிப்புக்களைத் தவிர்த்து, கதைக்கு மிக முக்கியமான விஷயங்களை மட்டும் சேர்த்து, அவற்றின் மிக முக்கியமான ஒன்றோ இரண்டோ சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்லி அவற்றுக்குள்ளிருக்கும் தொடர்பை விவரிப்பது.
வண்ணம் சேர்க்கக் கூடவே கூடாது.
இவற்றுக்கெல்லாம் மேலாக கோட்டுச் சித்திரமோ குறுங்கதையோ அதில் சேர்க்கப்படும் உருவங்களின்மீது ஓவியரோ எழுத்தாளரோ எப்படி வெளிச்சத்தை விழ வைக்கிறார் என்பது அவற்றின் வெற்றிக்கு இன்றியமையாதது.
குறுங்கதையைப் பொறுத்தவரை அதன் வெற்றிக்குக் காரணமாகும் வெளிச்சம் என்பது அதன் முடிவில் எழுத்தாளர் கண்டடையும் ஓர் உண்மை, ஒரு மெய்யியல் தரிசனம்.
நான் படித்த பல குறுங்கதைகள் இத்தகைய கோட்டுச் சித்திரங்களாக இல்லாமல் வண்ணமெல்லாம் சேர்த்து பாதி ஓவியங்களாக இருந்தன.
வேறு சில குறுங்கதைகள் எவ்வித மெய்யறிதலும் இல்லாத வெறும் technical பயிற்சிகளாகவே நின்று போயிருந்தன.
இந்த வகையில் பார்க்கப் போனால் எஸ். ராமகிருஷ்ணனன் அவர்களின் குறுங்கதைகள் மிக அழகானவை. ஆழமானவை.
பெருந்தேவி சுனில் கிருஷ்ணன் ஆகியோரின் குறுங்கதைகளில் பலவும் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன.

ஒரு பாடம் போல சொல்லியுள்ளீர்கள் சார். நிச்சயம் பயனான ஒன்று. திரும்பத்திரும்ப வாசித்துப் பாக்கிறேன். கோட்டோவியத்தில் படும் வெளிச்சத்தோடு குறுங்கதையில் எழுத்தாளர் கண்டடைவதை சேர்த்திருப்பது நேர்த்தி. நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்…
LikeLike