
அர்ஜெண்டினிய எழுத்தாளர் ஹோசே லூயிஸ் போர்ஹெஸ்ஸுக்குச் சிறு வயதில் சில விசித்திரமான பயங்கள் இருந்ததாக அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தன்னுடைய முகத்தை உரித்தெடுப்பது போலவும் அதை முழுவதும் உரித்த பின்னால் வேறொருவரின் முகம் தன் முகத்திற்கு அந்நியன் ஒருவனின் முகம் இருப்பது போலவும் இளம் வயது போர்ஹெஸ்ஸுக்குப் பயங்கரமான கனவுகள் வந்திருக்கின்றன. அல்லது அணிந்திருக்கும் முகமூடி அகற்றும்போது அதற்கடியில் வேறொரு முகமூடி இருப்பதுபோல்.
இதனால் தனது முகத்தைப் பிரதிபலிக்கும் பளபளப்பான பொருள்களிடம் – மிகக் குறிப்பாக முகம் பார்க்கும் கண்ணாடிகளிடம் – மிகப் பெரிய ஈர்ப்பையும் அதே சமயம் ஒரு வகையான வெறுப்பையும் போர்ஹெஸ் கொண்டிருந்தாராம்.
போர்ஹெஸ் எழுதிய ‘எல் எஸ்பெஹோ’ (கண்ணாடி) என்ற கவிதையில் கீழ்வரும் வரிகள் வருகின்றன: “பையனாக இருக்கும்போது நான் நிலைக்கண்ணாடியைப் பார்த்துப் பயப்பட்டேன்/அது வேறொரு முகத்தையோ/அல்லது மிகக் கேவலமான காரியம் எதையேனும் மறைத்திருக்கும்/ பார்வையில்லா அந்நிய முகமூடியையோ காட்டிவிடுமோ என்று.
போர்ஹெஸ்ஸின் கருத்தில் மூலப் பொருளையோ சித்திரத்தையோ பிரதியெடுக்கும் எதுவும் மூலத்திற்கு விசுவாசமுள்ளதைப்போல் தோன்றினாலும் ஏதேனும் ஒரு வகையில் மூலத்தைக் கீழறுப்புச் செய்துவிடும் என்று நம்பினார்.
விசுவாசமுள்ளதைப்போல் காட்டிக் கொண்டாலும் அடிப்படையில் மூலத்தைப் பிரதிபலிக்கும் எந்தப் பிரதியும் அடிப்படையில் விசுவாசமில்லாத போலியே.
கவனிக்காத வேளையில் பிரதிகளுக்குள் மூலத்துக்கு எதிராக ரகசியச் சூழ்ச்சிகளும், தந்திரங்களும், போராட்டங்களும் நடைபெறுகின்றன.
கண்ணாடியைப் பற்றி எழுதிய வேறொரு கவிதையில் மனிதர்களையும் மனிதர்களின் உடைமைகளையும் கண்ணாடி பல மடங்குப் பெருக்கிக் காட்டுவதாகவும், போர்ஹெஸ் செத்த பிறகு மற்றொருவரையும், அதற்குப் பின் வேறொருவரையும் பிரதிபலித்துக் கொண்டே போகும் மாயப் பொருள் என்று போர்ஹெஸ் எழுதுகிறார்.
போர்ஹெஸ்ஸின் பல புகழ்ப்பெற்ற கதைகள் உலகில் நம் கண் முன்னே தென்படும் மனிதர்களையும், அவர்களுடைய செயல்களையும், அவர்கள் செயல்படும் சூழல்களையும் பிரதி எடுத்துக் காட்ட முயலும் மொழி, எழுத்து, கதைகள், வரலாற்றுக் குறிப்புக்கள், வரைபடங்கள், போலி நாணயங்கால் ஆகியவற்றையே சுற்றிச் சுற்றி வருவதற்கு நிஜத்தை வாசகனிடம் இலக்கியம் நிஜமாகவே கடத்துகிறதா என்ற போர்ஹெஸ்ஸின் இந்தச் சந்தேகம்தான் காரணம்.
குறிப்புக்கள் நிரம்பி வரலாற்றுக் குறிப்புக்கள்போல் தோன்றும் கதைகளையும், கதைகளைப்போல் தோன்றினாலும் உண்மையில் வரலாற்று, அறிவியல் குறிப்புக்கள் நிறைந்த கட்டுரைகளையும் போர்ஹெஸ் தன்னுடைய புனைவின் பாணியாக்கிக் கொண்டார்.
இப்படி எழுதியவற்றில் எது உண்மை, எது கற்பனை.
கதைகளால் ஆனவைதான் வராலாறுகள். வரலாறுகளை மெருகேற்றித் தருபவைதான் கற்பனைக் கதைகள்.
இந்தச் சிந்தனையைப் போர்ஹெஸ்ஸின் எழுத்துக்களில் மட்டுமல்ல, டால்ஸ்டாய், இத்தாலோ கால்வினோ ஆகியோரது கதைகளில்கூடக் காணலாம்.
நாம் அதற்கு முன்னால் நிற்காத நேரத்தில் கண்ணாடியில் என்ன நடக்கிறது என்று நம்மால் பார்த்துச் சொல்ல முடிந்ததால்தான் இந்தப் புதிருக்கும் நம்மால் விடை சொல்ல முடியும் என்பதுதான் போர்ஹெஸ்ஸின் பதில்.
அப்படியென்றால் இலக்கியத்தால் என்ன பயன் என்று கேட்பீர்கள் என்றால் – கண்ணாடியைப்போல் அதுவும் நம் கண் முன்னால் அற்புதங்களை நடத்திக் காட்டும் எண்ணிறந்த ரகசியங்கள் புதைந்திருக்கும் மாயப் பொருள்.