
கிரேக்க மொழியில் typos என்ற வார்த்தை உள்ளது. இந்தச் சொல்லுக்கு ‘வகை’ என்று பொருள். உயிரியலிலும் பயன்படும் இச்சொல் பொதுவான குணநலன்களை கொண்ட உயிரினங்களின் தொகுப்பைக் குறிப்பிடப் பயன்படும்.
அந்தந்தக் குழுவுக்கு உரிய குணங்களை வெளிப்படுத்துவர்கள் இன்னின்ன type-ஆக நடக்கிறார்கள் என்றும், இது அவர்களுக்குத் typical-ஆக நடத்தை என்றும் சொல்வதுண்டு.
ஒருவரைக் குறிப்பிட்ட சில எதிர்ப்பார்ப்புகளாலான சட்டகத்துக்குள் அடைக்கப் பார்த்தால் அவரை stereotypeஆக மாற்றியிருக்கிறோம் என்று அர்த்தம்.
இலக்கியப் படைப்புகளிலேயும் கதாபாத்திரங்களைப் பொதுபுத்தி எதிர்ப்பாக்கும் விதமாக அடைக்க எழுத்தாளர்கள் முயல்வதுண்டு. இது தவறென்றும் சொல்ல முடியாது. ஒரு வகையில் சிலரது குணாதிசயங்களைப் புரிந்து கொள்ள stereotypeகள் உதவியாகத்தான் இருக்கின்றன.
கொலைகாரன் இப்படித்தான் இருப்பான், சாதுவானவன் இப்படித்தான் பேசுவான் என்று நமக்கு நாமே சில பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில் stereotypeகள் முதிராத இலக்கியத்தின் அடையாளங்களே.
ஆனால் வாழ்க்கையையும் மனிதர்களையும் புரிந்து கொள்ள அவை குறுக்குவழிகளாகச் செயல்படுகின்றன.
சிறுவர் கதைகள் இதனால்தான் stereotypeகளால் நிரம்பியிருக்கின்றன. சில பேர் வளர்ந்த பிறகும் stereotypeகளின்படி வாழ்வதுதாம் துரதிர்ஷ்டம்.
டால்ஸ்டாயின் மேதமையே சில நூறு கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கும் ‘போரும் அமைதியும்’ நாவலிலேகூட இத்தகைய stereotypeகளுக்கு இடம் கொடுக்காததுதான்.
இதன் அடிப்படையில் டால்ஸ்டாய் மனிதனைப் பற்றிக் கொண்டிருந்த தீர்க்கமான நம்பிக்கை இருந்தது.
எழுபது வயதில் டால்ஸ்டாய் கீழ்வரும் குறிப்பை எழுதுகிறார் : ‘மனிதன் (நதிபோல்) ஓடிக் கொண்டே இருக்கிறான். அவனுக்குள் எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன: அப்போது முட்டாளாக இருந்தான், இப்போது அறிவாளியாக இருக்கிறான். கெட்டவனாக இருந்தான், இப்போது நல்லவனாக இருக்கிறான். அல்லது அப்படியே நேர்மாறாக மாறுகிறான். இதில்தான் மனிதனின் மகத்துவம் அடங்கியிருக்கிறது.’
நதிபோல் உருமாறக் கூடிய சாத்தியமே மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகிறது. அதுவே மிருகங்களிடமிருந்து அவனை உயர்த்திக் காட்டுகிறது.
டால்ஸ்டாயின் கோஸாக்குகள், போரும் அமைதியும், அன்னா கரனீனா, இவான் இலியிச்சின் மரணம் போன்ற நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் அவரின் இந்தக் கூற்றை நிரூபிப்பதுபோல் மிக மோசமான தவறுகளையும் செய்கிறார்கள். அதே சமயம் மிக உன்னதமான அனுபவங்களுக்கும் தகுதியுடையவர்களாகிறார்கள்.
போரும் அமைதியும் நாவலில் போரில் அடிபட்டுக் குற்றுயிராய் நெப்போலியனின் காலடியில் சகதியில் அமிழ்ந்து கிடக்கும் பியெர் பின்பு 1811ம் ஆண்டு மாஸ்கோ வானத்தை எரிநட்சத்திரம் தாண்டிப் போவதைப் பார்க்கும்போது காதலின் உன்னத உணர்வுகளை அனுபவிக்கிறான்.
மனிதனின், மனித வாழ்க்கையின் அத்தனைச் சாத்தியங்களையும் அள்ளித் தரவா முழு வாழ்க்கையின் ஒரு துண்டாகவே டால்ஸ்டாய் ‘போரும் அமைதியும்’ எழுதினார்.
மாறக்கூடிய இந்தச் சாத்தியம்தான் மனிதனின் உண்மையான மகத்துவம் என்று டால்ஸ்டாய் நம்பினார்.
இந்த வகையில் தேவதூதர்களைவிடவும் மனிதர்கள் உன்னதமானவர்கள் என்பது டால்ஸ்டாயின் கருத்தாக இருந்தது. ஏனென்றால் இன்று சகதியில் கிடக்கும் மனிதர் நாளை எரிநட்சத்திரத்தோடு உயரமான வானத்தில் சஞ்சரிக்க முடியும்.
தேவதூதர்களால் நல்லவர்களாக இருப்பதைத் தவிர்த்து வேறெதையும் செய்ய முடியாது.
எந்த மனிதனைப் பற்றியும் முன்முடிவுகளோடு தீர்ப்பு எழுதிவிடக் கூடாது என்பதுதான் ‘போரும் அமைதியும்’ நாவலின் மிக முக்கியமான படிப்பினைகளில் ஒன்று என்றே கருதுகிறேன்.