தஸ்தவ்யஸ்கியின் ‘அசடன்’ நாவல் கதையின் மறுகருத்தாக்கமாகப் பிரெஞ்சு இயக்குநர் ரோபர்ட் பிரஸ்ஸான் 1966ல் ‘ஓ ஹாஸார்ட் பால்தாஸார்’ (‘Au Hasard Balthasar – ‘ஒரு ஒழுங்கும் இல்லாமல், பால்தாஸார்’/’ஏனோ தானோவென்று, பால்தாஸார்) என்ற திரைப்படத்தை எடுத்தார்.
திரைப்படம் பல பேரிடம் கைமாற்றி விடப்படும் பால்தாஸார் என்ற கவிதையைப் பற்றியது.
கதைப்படி பிரெஞ்சு பிரினி மலையின் அடிவாரத்தில் வாழும் சில குழந்தைகள் ஒரு கழுதைக்குட்டியைத் தத்தெடுக்கிறார்கள். தேவாலயங்களில் செய்வதுபோலவே கழுதைக்குட்டிக்கு ஞானஸ்நானம் தந்து அதற்குப் பால்தாஸார் என்று பெயரிடுகிறார்கள்.
கழுதையைப் பார்த்துக் கொள்ளும் ஜாக் என்ற பையனின் குடும்பம் அவர்கள் வசிக்கும் பண்ணையைக் காலி செய்யும்போது பால்தாஸார் கழுதை அடுத்த வீட்டில் வசிக்கும் ஜாக்கின் இளவயது காதலியான மரியின் குடும்பத்திற்குக் கைமாறுகிறது. பிறகு மரியின் தந்தைக்குப் பணக்கஷ்டம் வர, கழுதை பேக்கரி ஒன்றுக்குக் கைமாற்றப்படுகிறது.
பேக்கரியில் கழுதையை இரக்கமின்றி வேலை வாங்குகிறார்கள். பேக்கரியில் வேலை பார்க்கும் ஜெரார்ட் என்னும் பையன் அந்த ஊரில் இருக்கும் கேங் ஒன்றின் தலைவனாக இருக்கிறான். மரி கழுதையைத் தேடி வரும்போது அவளைக் கற்பழிக்கிறான். பின்னர் மரி ஜெரார்ட்டின் காதலியாகிறாள்.
ஜெரார்ட்டைப் போலீஸார் கொலை ஒன்றின் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கும்போது கழுதை குடிகாரன் ஒருவன் கைகளுக்கு மாறுகிறது. குடிகாரன் சுற்றுலா பயணிகளை ஏற்றுவதற்காகக் கழுதையைப் பயன்படுத்துகிறான். வேலை பளு தாங்காமல் தப்பித்து ஓடும் கழுதை சர்க்கஸில் மாட்டிக் கொள்கிறது. ஒரு நாள் சர்க்கஸுக்கு வரும் குடிகாரன் அதை மீட்கிறான்.
குடிகாரன் நாளடைவில் பெரும் சொத்துக்கு வாரிசாகி நண்பர்களுக்குப் பார்ட்டி தருகிறான். பார்ட்டியில் குடித்துவிட்டு அவன் கழுதை மீது அமர்ந்து அவர் வீடு திரும்பும் வேளையில் தவறி இறந்து செத்துப் போகிறான்.
அதனால் கழுதை அடுத்ததாகப் பண்ணைக்காரனிடம் போகிறது. ஜெரார்ட்டிடமிருந்து பிரிந்துவிட்ட மரி கழுதையைத் தேடி வருகிறாள். பண்ணைக்காரன் மரியையும் கழுதையையும் மரியின் பெற்றோரிடமே ஒப்படைக்கிறான்.
ஜாக் மரியைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லிக் கொண்டு வருகிறான். மரி, ஜெரார்ட்டிடம் தான் தீர்க்க வேண்டிய விஷயங்கள் உண்டு என்று சொல்லி மீண்டும் அவனிடம் போகிறாள். அங்கு ஜெரார்ட்டும் அவன் கேங் கூட்டாளிகளும் அவள் உடைகளைக் களைந்து அவளைக் கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள்.
ஜாக்கை மரி நிராகரிக்கிறாள். மரியின் தந்தை செத்துப் போகிறார். ஜெரால்ட் கள்ளக் கடத்தல் செய்யப் பால்தாஸாரை இரவல் வாங்கிப் போகிறான். போலீஸார் துப்பாக்கியால் ஜெரால்ட்டையும் அவனுடைய கூட்டாளிகளையும் துப்பாக்கியால் சுடுகிறார்கள்.
திரைப்படத்தின் கடைசி காட்சியில் பால்தாஸார் கழுத்தின் குண்டடி பட்டுக் கிடக்கிறது. ஓர் ஆட்டிடையன் அங்கு வருகிறான். அதைச் சுற்றி ஆடுகள் நிற்க பால்தாஸார் செத்துப் போகிறது.
தஸ்தவ்யஸ்கியின் அசடன் கதாபாத்திரமான மிஷ்கினைப் போலவே இயேசு கிறிஸ்துவின் பிம்பமாகப் படைக்கப்பட்டிருக்கும் பால்தாஸார் கழுதை திரைப்படம் முழுவதும் சொல்ல முடியாத துன்பங்களைச் சுமக்கிறது. கடைசியில் தனது பாடுகளைச் சுமந்தபடியே எந்தவித பாவமும் செய்யாத போதும்கூட (இயேசுவைப்போலவே) சாகடிக்கப்படுகிறது.
பால்தாஸார் மீது உண்மையான அன்பு வைக்கும் மரியும் அவமானத்துக்கும் சித்திரவதைக்கும் ஆளாகிறாள்.
திரைப்படம் முழுவதும் பால்தாஸார் கழுதையின் ஞானஸ்நானத்திலிருந்து மரி தலையில் சூடிக் கொள்ளும் டெய்ஸி மலர்களின் வளையம் (இயேசுவின் தலையிலிருக்கும் முள்கிரீடம்), சாகக் கிடக்கும் பால்தாஸாரைச் சுற்றி நிற்கும் மேய்ப்பன் ஆடுகள்வரை திரைப்படத்தில் கிறித்துவ குறியீடுகள் நிரம்பி உள்ளன.
படத்தில் காட்டப்படும் வாழ்க்கையின் அபத்தத்தை வெளிக் கொண்டுவரும் வண்ணம் பிரஸ்ஸான் படத்தில் அமெச்சூர் நடிகர்கள்களையே பயன்படுத்தினாராம். தொழில்முறை நடிகர்கள் கதையை அவர்கள் பாணியில் புரிந்துகொண்டு நடிப்பார்கள் என்றும் அது தன் கதைகூறலின் துல்லியத்தைக் கெடுத்துவிடும் என்றும் அவர் அஞ்சினார்.
ரோபர்ட் பிரெஸ்ஸானின் ‘ஓ ஹாசார்ட் பால்தாஸார்’, பிரெஞ்சுச் சினிமாவின் உன்னதமான படங்களில் ஒன்று.
